top of page

அப்பாவைக் கொன்று தின்ற கனி - ஜெயமோகனின் சிறுகதை




ஆனந்த விகடனில் ஜெயமோகன் ஒரு கதை எழுதியிருக்கிறார்.


ஒரு அப்பாவை, ஒரு அம்மா கைதவறிக் கொன்று விடுகிறாள். குற்றவுணர்வு அவளைக் கொல்கிறது. ஆனால், கொஞ்ச காலம் தான். சீக்கிரமே அந்தக் குற்றவுணர்விலிருந்து விடுபட்டும் விடுகிறாள். வேறொரு தேசம், வேறொரு வாழ்க்கை என்று முழுவதுமாக மாறிப்போகிறாள். அம்மாவின் விரைந்த விடுபடுதலை மகனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழம்புகிறான். ஏறக்குறைய மனச்சிதைவுக்கு ஆளாகிறான். இந்த நேரம், ஒரு அமெச்சூர் உளவியலாளர் மகனுக்கு உதவ முன்வருகிறார். ஆனால், அவரது ஆலோசனை விபரீதமாக இருக்கிறது. ‘அப்பாவை நீயே கொன்றதாக நம்பி, சடங்குகளைச் செய். குற்றவுணர்விலிருந்து விடுபடுவாய் !’


1. அப்பா - அம்மா - மகன் என்றொரு ஃப்ராய்டியக் குடும்பம். அப்பாவைக் கொன்ற குற்றவுணர்ச்சி தான் கதையின் சிக்கல்.


2. அந்த அமெச்சூர் உளவியலாளரின் பெயர் மார்த்தா. நமது மகனின் முதல் மனைவி. விவாகரத்தாகி இருவரும் வேறு வேறு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவளது இரண்டாவது கணவன், நமக்குத் தெரிய, தச்சு வேலை செய்கிறான். மேரி - ஜோசப் - ஜீசஸ். இதுவும் ஒரு ஃப்ராய்டியக் குடும்பம் தான்.


3. மார்த்தா, ஒரு அமெச்சூர் உளவியலாளர் என்பதை தச்சு வேலை செய்து கொண்டிருக்கும் அவள் கணவனே நமக்குச் சொல்கிறான். ‘அவளிடம் தீர்வுகள் இருக்கின்றன!’ என்கிறான். அவன் செய்து கொண்டிருக்கும் தச்சு வேலையும் மார்த்தா சொன்ன உளவியல் சிகிச்சை தானாம். நாம் பார்க்கும் போதும் தச்சு வேலை தான் செய்து கொண்டிருக்கிறான். அப்படியானால், அவன் இன்னமும் குணமாகவில்லை. அல்லது, அவனொரு நிரந்தர ரோகியாக இருக்கலாம். அதாவது, வாழ் நாள் முழுக் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியவன். அவனுக்கு என்ன ரோகம் என்று ஜெயமோகன் நமக்குச் சொல்வதில்லை.


4. மகனின் (கதையில் அவனுக்கு மகா என்று பெயர்) பிரச்சினை குறித்து ஜெயமோகன் நம்மிடம் தெளிவாகப் பேசி விடுகிறார். ‘அப்பாவைக் கொன்றது நான் தான்’ என்று அம்மா கதறி அழுது கொண்டிருக்கிற வரையில் மகனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது கொலை என்பதை இருவரும் சேர்ந்தே மறைத்து விடுகிறார்கள். ஆனால், அதே அம்மா குற்றவுணர்விலிருந்து விடுபட்டதும் அவனுடைய சிக்கல் ஆரம்பித்து விடுகிறது. அதெப்படி அத்தனை எளிதாய் அம்மா குற்றவுணர்விலிருந்து விடுபட்டு விடலாம் என்பது தான் அவனது ஆகப் பெரிய கேள்வி.


5. ஜெயமோகன் விளக்கவில்லை என்றாலும், மகனின் சிக்கலை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று, அம்மா எப்படி இத்தனை சீக்கிரம் குற்றவுணர்விலிருந்து வெளிப்பட்டாள்? இரண்டாவது, அந்தக் கொலையை மறைத்த வகையில் எனக்கும் குற்றத்தில் பங்கிருக்கிறதா?


6. இந்த நேரமே மார்த்தா அவனுக்கு உபாயத்தை சொல்லித் தருகிறாள் - அப்பாவை நீயே கொன்றதாய் நம்பி விடு.


7. கிறிஸ்தவம் இப்படித்தான் சொல்கிறது. பிதாவின் கட்டளையை மீறிய ஏவாளுக்கு மட்டுமல்ல, ஆதாமுக்கும் அந்தப் பாவத்தில் பங்கிருந்தது. எனவே இருவரையும் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்ட வேண்டும். அப்பாவின் கட்டளையை மீறுவதற்கும் அவரைக் கொன்று விடுவதற்கும் அதிக வித்தியாசமில்லை. அவ்விருவர் தான் என்றில்லை, அவர்களிடமிருந்து பலுகிப் பெருகிய மானுட இனத்திற்கே அந்தப் பாவத்தில் பங்கு உண்டு என்கிறது கிறிஸ்தவம்.


8. கிறிஸ்தவம் இந்தப் பாவத்திலிருந்தே மனிதர்களுக்கு விடுதலை தருகிறது. மனந்திரும்புங்கள் என்பது கடைசியில் இது தான். ஞானஸ்நானம் (அறிவுக்குளியல்!) என்ற பெயரில் நடத்தப்படும் சடங்கு இந்தச் சாவான பாவத்திலிருந்தே உங்களை விடுவிக்கிறது.


9. ஃப்ராய்டும் ஏறக்குறைய இதே கதையைத் தான் நமக்குச் சொல்கிறார். ‘தந்தையின் பெயரால்!’ என்றொரு கதை இருக்கிறது. அந்தக் கதையில் ஒரு மகன் அல்ல பல மகன்கள் சேர்ந்து ஒரே அப்பாவைக் கொன்று விடுகின்றனர். கொன்ற பின்பு தோன்றிய குற்றவுணர்ச்சி அவர்களைப் பதிலுக்குக் கொன்று கொண்டிருக்கிறது. இந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட மனிதர்கள் சடங்குகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள் என்கிறார் ஃப்ராய்டு.


10. கிறிஸ்தவமும் ஃப்ராய்டும் ஒரே விஷயத்தை தான் நமக்குச் சொல்கிறார்கள். குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்கு சடங்குகளைச் செய்வது தான் ஒரே வழி. சடங்குகள், ஒரு வகை உளவியல் சிகிச்சை.


11. மார்த்தாவை முன்வைத்து ஜெயமோகனும் இந்த வழிமுறையைத் தான் மகாவுக்கு பரிந்துரைக்கிறார். ‘போ. போய் உன் தந்தையைக் கொன்றதற்கான பரிகாரச் சடங்குகளை மனப்பூர்வமாய் செய்! அது உன்னை சொஸ்தமாக்கும்!’ கிறிஸ்தவம், ஃப்ராய்டு, மார்த்தா என்ற அமெச்சூர் உளவியலாளர், ஜெயமோகன், இந்திய வாழ்க்கை வட்டச் சடங்குகள் என அத்தனை பேரும் ஒரே மாதிரியாக ஒரே தீர்வைத் தான் முன்வைக்கிறார்கள். அப்பாவைக் கொன்றதை ஒத்துக் கொள்! எல்லாம் சரியாகிவிடும்.


12. அந்தக் கதையின் மாயத்தருணமாகவும் இதுவே சொல்லப்படுகிறது. ‘நீயே தந்தையைக் கொன்றதாய் நினைத்துக் கொள். மீண்டு வருவாய்!’ அதாவது, இல்லாத அழுக்கைக் கழுவிக் கொள். செய்யாத கொலைக்காக மண்டியிடு. இல்லாத கத்தியில் படிந்துள்ள ரத்தக்கறையைத் துடை. இதறகென்றொரு வசீகரம் இருக்கிறது.


13. இந்த வசீகரமே சடங்குகளின் உயிர் நாடி. ஆடி அமாவசையில் மூத்தோருக்குச் செய்யும் நீர் நிலைச் சடங்குகளில் சொட்டுவது இந்த வசீகரம் தான்.


14. இந்த வசீகரங்களே சடங்குகளிலிருந்து தொன்மங்களுக்கும் பரவுகின்றன. மூத்தோர் வழிபாட்டை, ’தென்புலத்தார் கடன்’ என்று சொல்வதும், ’மேனி எங்கும் யோனி’ என்பதும் இப்படியான மயக்கங்கள்.


15. ஃப்ராய்டின் உளவியல் விளக்கங்களை நவீன தொன்மங்கள் என்று சொன்னால் ஆச்சரிப்படுவீர்கள். அவற்றிலும் வசீகரமிருந்தது. பெரும்பாலும் கிரேக்க புராணங்களை துணைக்கழைத்து விவாதித்துக் கொண்டிருந்த ஃப்ராய்ட் ஒரு கட்டத்தில் தானே ஒரு புராணத்தை உருவாக்கத் தலைப்பட்டார். அந்தத் தொன்மம் ‘தந்தையின் பெயரால்’ என்று அழைக்கப்பட்டிருந்தது. தொன்மம் இருந்தால் சடங்குகள் இருக்க வேண்டுமே, இருந்தன. அந்தச் சடங்கில் உளவியலாளரும் மனம் பிறழ்ந்தவரும் பங்கேற்று வந்தனர்.


16. ஜெயமோகன் கதையிலும் அப்படியொரு சடங்கு நிகழ்கிறது. காபி அருந்திய படி நடக்கும் உளவியல் சடங்கு. அந்த நவீன சடங்கு உங்களை இன்னொரு பாரம்பரிய சடங்கிற்கு வழி காட்டிச் செல்கிறது. போ. போய் ஈமக்கிரிகைகளைச் செய்து விட்டு நிம்மதியாய் இரு!


17. இந்தக் கதைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. சமயங்களும், சடங்குகளும், உளப்பகுப்பாய்வுகளும், ஜெயமோகன் போன்ற கதைசொல்லிகளும் இந்த பரிமாணத்தைப் பெரும்பாலும் கண்டு கொள்வது இல்லை. உண்மையிலேயே அப்பாவைக் கொன்றது அவ்வளவு பெரிய குற்றமா? அதற்காக இத்தனை குற்றவுணர்ச்சி அடைய வேண்டியது அவசியமா?


18. இந்தக் கேள்விகள் உங்களுக்கு முரட்டுத்தனமாகத் தோன்றலாம். இப்படிக் கேட்டுப் பாருங்கள் அப்படித் தோன்றாது: அரவத்தின் சொல் கேட்டு ஏவாள் கனியை உண்டது அத்தனை பெரிய பாவமா என்ன? அதில் பாதியை காதலோடு ஆதாமுக்கும் தந்ததை சாவுக்கு நிகரான பாவம் என்று தான் சொல்வோமா? அப்பாவின் அப்படியொரு கட்டளை மீற வேண்டிய ஒன்றல்லவா? அதாவது, அப்பா கொல்லப்பட வேண்டியவர் இல்லையா? நியாயமான கொலைக்காக யாராவது வருத்தப்படுவார்களா?


19. ஏவாள் நிஜமாகவே துணிச்சல்காரி. அநீதியான அப்பாவின் வார்த்தையை மீறிய கலகக்காரி கூட. அவள் தான் நிர்வாணத்தைக் கண்டு பிடிக்கிறாள். அதற்கு முன் நிர்வாணத்தை அறிந்தவர் அப்பா என்ற கடவுள் மட்டுமே. கடவுளுக்குப் பெண் மீது அதனாலேயே கோபம் என்கிறது கிறிஸ்தவம் - பெண்கள் எப்பொழுதும் கடவுளாக முயற்சிக்கிறார்கள். ஆணுக்கோ பெண்ணின் காதலைத் துய்ப்பது தவிர வேறு ஒரு எழவும் தெரிவதில்லை.


‘ஏவாள், மொழியின் மூலமே நிர்வாணத்தைக் கண்டடைந்தாள்’, என்று ஒரு முறை அயோத்திதாசர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.


தமிழில், அமுதமும் உண்டு நஞ்சும் உண்டு என்ற அவரது கோட்பாட்டை முன்வைத்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு வேகத்தில், ’மொழி தான் மனிதனின் ஆகப்பெரிய சாதனை, தெரியுமா?’ என்றார்.


‘தெரியும். ஒவ்வொரு மனிதனும் எந்த மொழியில் சாதிக்கிறானோ அதுவே அவனது சாதி என்று எழுதியிருக்கிறீர்கள்’.


‘அது மட்டும் இல்லை; மொழி ஒரே நேரத்தில் அமிழ்தமாகவும், விஷமாகவும் இருக்கிறது. நாகக்கனி என்பது ஒரு உவமை. சிந்தனை பற்றிய உவமை. அந்த ஞானத்தின் உச்சமே நிர்வாணம் - பரி நிர்வாணம்’ என்றார்.


பின், ‘அப்படி கண்டடைந்த நிர்வாணத்தைத் தான் ஏவாள் ஆதாமிற்குக் காட்டியிருக்கிறாள்’ என்று என்னிடம் மெல்ல கிசுகிசுத்தார்.


20. அந்தக் கதையின் ஏவாள் பரிமாணத்தையும் ஃப்ராய்ட் தவறவிட்டிருந்தார். அவருக்கு மொத்த உலகமும் அப்பாவும் மகன்களும் அவர்களுடைய ஆண் குறிகளுமாக இருந்தது.


21. அப்பாவைக் கொல்வது மட்டுமல்ல அதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு அசைவும் விலக்கப்பட்ட கனி தான். ஆனால் அந்தக் கனியால் மட்டுமே உங்களுக்கு நிர்வாணத்தை வழங்க முடியும். அந்தக் கனியை உண்பது மட்டுமல்ல, நிர்வாணத்தை நிர்வாணம் என்று காண்பதும் இதில் முக்கியம்.


22. அந்த அமெச்சூர் உளவியலாளர் மார்த்தா வழியாக, மனக்குழப்பங்கள் இல்லாமல் சராசரியாய் வாழ்வது எப்படி என்று விளக்கம் தருகிறார் ஜெயமோகன். அதற்கு ஃப்ராய்டு என்றொரு வியாசர் பயன்பட்டிருக்கிறார்.


23. என்னிடம் கேட்டால், ஜெயமோகன் முடித்த இடத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது என்பேன். செய்யாத கொலையை செய்ததாய் நம்பி, சடங்குகள் செய்பவனிடம் சொல்வதற்கு காத்திரமான கதையொன்று இருக்கக் கூடும். அல்லது, கொலை செய்த சுவடே இல்லாமல் வாழும் அம்மாவிடம் இருக்கக்கூடும் மகனின் கண்களுக்குப் புலப்படாத ஆயிரம் சலனங்கள்.


Comments


bottom of page