top of page

இலங்கையில் சிங்களவர்! உலகெங்கும் ஈழத்தமிழர்!

(4-02-2017 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியதன் எழுத்து வடிவம்.)


வேற்றுமைகளே உண்மை / வேற்றுமைகளைக் கடந்த உண்மை


நான் மிகவும் மதிக்கக்கூடிய மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி எழுதியுள்ள ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற நூல் சிங்களவரைப் பற்றிய மானிடவியல் நூல் அல்ல.




மாறாக இது ஒரு சர்ச்சையை உத்தேசித்து எழுதப்பட்ட அரசியல் நூல். முரண்பட்டே நிற்கும் என்று கற்பனை செய்யப்படும் (உபயம்: அமைப்பியல் மானிடவியலாளர் கிளாட் லெவி ஸ்ட்ரோஸ்) அருகாமை இனங்கள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்காக ஆரம்பிக்க வேண்டிய சர்ச்சை இது.


தேசிய இனப் போரால் சகல தளத்திலும் சிதைக்கப்பட்டிருக்கிற இலங்கைக்கு இப்படியொரு சர்ச்சையும் அதைத் தொடர்ந்து நிகழும் உரையாடலும் அவசியம். அப்படியொரு உரையாடலை தமிழர்கள் பக்கமிருந்து பாரதி ஆரம்பிக்கிறார்.


புத்தகத்தில் அவரே சொல்வது போல், தொல்லியல், வரலாற்றியல், சமூக அறிவியல்கள், மொழியியல் என்று பல்வேறு துறைகள் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கிற ஆய்வுகளின் வழி சிங்களவர்களை அறிமுகம் செய்ய இந்த நூல் முயற்சி செய்கிறது. அதுவும் குறிப்பாக, தமிழ் வாசகர்களிடம் முயற்சி செய்கிறது.


இதற்காக, சிங்களவர் பற்றி ஆங்கிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆய்வு நூற்களை துறை வாரியாக அறிமுகம் செய்ய ஆரம்பிக்கிறார். வழக்கமாக மானிடவியலாளர்கள் களத்தில் சொந்தமாக சென்று தகவல்களை சேகரிக்காமல் (முதல் நிலைத் தரவுகள்) எழுத ஆரம்பிப்பது இல்லை. அப்படிச் செய்வது கற்பில் களங்கம் என்று நினைக்கிறவர்கள். ஆனால், பக்தவத்சல பாரதி இந்த முறை கற்பு பற்றியெல்லாம் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.


முன்னுரை, பின்னுரை தவிர்த்து இந்த நூலில் எட்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.


சிங்களவர் என்ற சொல் உருவான விபரம், சிங்கள இனம் என்பது என்ன, சிங்களவரின் சாதி முறை, உறவு முறை, திருமண முறை, சிங்களவர்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு, முருகன் வழிபாடு, சிங்களவரின் மொழி என்று விரிகின்ற எட்டுக் கட்டுரைகளும் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக சித்தரிக்கின்றன. சிங்களவர் நமக்கு அந்நியரல்ல; அதனால் எதிரிகளும் அல்ல. இனம் சார்ந்து அவர்களிடம் இந்தியத் தொடச்சி காணப்படுகிறது; அதே நேரம், பண்பாடு சார்ந்து திராவிட (அதாவது தென்னிந்திய) சாயல் இருக்கிறது. அந்த நூலின் ஒட்டுமொத்த உள்ளக்கிடக்கையும் இவ்வளவு தான். ஆனால், இது அவ்வளவு எளிதானதா?


************


நூலின் தலைப்புமே கூட இதைத் தான் சொல்கிறது. ‘இலங்கையில் சிங்களவர்: இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும்’.


இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால், சிங்கள் மொழி இந்தோ - ஆரிய மொழியின் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது என்றாலும், திராவிட மொழிகளின் கூறுகளையே தனக்குள் கொண்டுள்ளது; சிங்களவர்களுக்கு வட இந்தியர்களோடும் திராவிடர்களோடும் இன உறவுகள் உள்ளன; அவ்வளவு ஏன், இந்தியாவில் தோன்றிய பெளத்த சமயத்தையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள்; திராவிடப் (தென்னிந்திய) பண்பாட்டையே பெரிதும் பிரதிபலிக்கிறார்கள். சிங்களவர்களின் மரபணுக்கள் தென்னிந்தியர்களோடு நெருக்கம் காட்டுகின்றன; எனவே, சிங்களவர் இன அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் நமக்கு அணுக்கமானவர்கள் என்ற செய்தியோடு பக்தவத்சல பாரதி இந்த புத்தகத்தை நிறைவு செய்கிறார்.


*********


கடந்த சில பத்தாண்டுகளாக நடைபெற்ற தேசிய இனப் போராட்டங்களால் இலங்கையின் உள்கட்டமைப்புகளும் அரசியல் பொருளாதார அமைப்புகளும் சிதிலமடைந்திருக்கின்றன. அவற்றை சீர்படுத்துவதற்கும் மீட்டெடுப்பதற்கும் இலங்கை அரசு பல்வேறு திட்டங்களை யோசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கும் முன்னால், தேசிய இனச்சிக்கல்களின் ஊற்றுக்கண்ணான சமூக உறவுச்சிக்கல்களையும், பரஸ்பர புரிதல்களிலுள்ள சிக்கல்களையும் சீர்படுத்துவது அவசியம். அந்த வகையில் பாரதியின் இந்த நூல் மிக முக்கியமானது. அதிலும், சிங்களம் - தமிழ் என்ற இரண்டு இன அடையாளங்களையும் எதிரும் புதிருமாக உருவகித்ததில் பண்பாட்டுக் கற்பிதங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு என்பதால் அதற்கு மாற்றான பார்வையை இந்த நூல் முன்வைக்கிறது. எனவே, வரவேற்கப்படவேண்டிய ஒன்று.


பண்பாட்டு வரலாறு, இவ்விரு இன மக்களையும் மொழியாலும் சமயத்தாலும் பிளவுபட்டவர்கள் என்று கட்டமைத்ததற்கும், சமகால அரசியல் -பொருளாதார அதிகாரப் போட்டியில் ஒன்றிற்கொன்று எதிரானவை என்று கட்டமைக்கப் பட்டதற்கும் நம்மிடம் ஏராளமான சான்றுகள் உள்ளன. அதன் விளைவான நாசகாரங்களை நாம் பார்த்திருக்கிறோம்.


இன்றைக்கு, அச்சமகால அரசியல் பொருளாதார மோதல்கள் ஒரு முடிவிற்கு வந்து சேர்ந்தது போன்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. தோற்றம் மட்டுமே!


இத்தருணத்தில், ஏற்கனவே உருவாக்கப்பட்ட பண்பாட்டுக் கற்பிதங்களை மறுபரிசீலினை செய்ய வேண்டியக் கடமையை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. காட்டுவதோடு, அதைச் செய்யவும் தொடங்குகிறது.


இதற்காக, சிங்களவர் பற்றி தமிழர்களான நம் மத்தியிலிருக்கும் கற்பிதங்களை சமூக அறிவியல் ஆய்வுகளின் துணையோடு நேர் செய்ய முயற்சி செய்கிறது.


***********


இந்தச் சூழலில் என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன:


ஒன்று, அரசியல் சொல்லாடலின் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு முரணை, அறிவியல் சொல்லாடலின் மூலம் நேர் செய்ய முடியுமா?


இரண்டு, அறிவியல் சொல்லாடல்கள் இனச்சார்புகளுக்கு அப்பாற்பட்டவையா?


மூன்று, இந்தப் புத்தகத்தை ஒரு ஈழத் தமிழர் எப்படி வாசிப்பார்?


***********


இனங்களுக்கு இடையிலான முரண் என்பது ஒரு வகையில் அடையாளங்களுக்கு இடையேயான முரண்களே. அதே போல, எல்லா அடையாளங்களும் தவிர்க்க முடியாதபடிக்கு சுயக்காதலிலிருந்தே தோன்றுகின்றன. இந்த சுயக்காதல், அவ்வினத்தின் மொழி, சமயம், பண்பாடு, வரலாறு, பாரம்பரியம் பற்றிய மேன்மைகளால் கட்டப்படுகிறது.


எந்த இரு அருகாமை பண்பாடும், தமக்குள் இரட்டை எதிர்மறை குணத்தைக் கொண்டிருப்பதாகத்தான் சமூக அறிவியல்கள் நம்புகின்றன. இந்த இரட்டை எதிர்மறை குணம் பரஸ்பரம் ‘நான் - மற்றவர்’ என்ற அடையாளக் கட்டமைப்புகளாக வெளிப்படுகின்றன. ஒவ்வொரு இனமும் தனது ‘நான்’ ஐ, அதீதக் காதலோடும், தனது ‘மற்றவர்’ ஐ தனக்குத் தெரிந்த அறிவியல் கண்ணோட்டத்தோடும் கட்டமைக்கின்றது. ஏறக்குறைய, சிங்களவர் - தமிழ் என்ற இரு இன அடையாளக் கட்டமைப்புகளும் கூட இத்தகைய குணங்களைக் கொண்டவையே!


இவ்வாறு முரண்டும் அடையாளங்களே, அரசியல் சொல்லாடலாக மாற்றப்பட்டு, வெகுஜனத் தளத்தில் பரப்பப்படுகின்றன. அதற்கான உண்மைத்தன்மைகளை அவ்விரு இனங்களும் அன்றாட வாழ்க்கையில் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருப்பதால், அது தேசிய இனப்போராட்டமாக உருமாறுகிறது.


இலங்கையில், ஏராளமான அழிவுகளுக்குப் பின்பும், அந்த அரசியல் சொல்லாடல்களின் ஞாபகங்களும், அதை வலியுறுத்துகின்ற சமகால நடப்புகளும் இன்றைக்கும் உயிர்ப்போடு தான் இருக்கின்றன. இத்தகைய சூழலில், இலங்கைக்கு இன்று தேவைப்படுவது அந்தப் பழைய அரசியல் பேச்சை மறுக்கக்கூடிய, அதே நேரம் புதிய பேச்சொன்றை உருவாக்ககூடிய ஒரு சொல்லாடல் மட்டுமே. அப்படியான சொல்லாடலொன்றை சமூக அறிவியல் ஆய்வுகள் வழங்கமுடியும் என்று பாரதியின் நூல் நம்புகிறது. எனக்கு அதில் சந்தேகங்கள் உள்ளன.


என்னுடைய சந்தேகத்திற்கு வலுவான காரணங்களும் உள்ளன. ஏனெனில், முரண்பட்ட இரு இன அடையாளங்களில் தமிழ் அடையாளம் மிகத் தெளிவான காலத் தொடர்ச்சியையும், எழுத்து மரபையும், பண்பாட்டுத் தொடர்ச்சியையும், அதை நிரூபிக்கக்கூடிய அருகாமைப் பண்பாடுகளையும் கொண்டிருக்கிறது. இது வரலாற்றுபூர்வமாகவும் உண்மை.


இதனால், எண்ணிக்கையளவில் பெரும்பான்மையான சிங்களவர் தன்னியல்பாக ‘வரலாற்று -பண்பாட்டுத் தாழ்வுணர்ச்சியை’ அடைந்திருந்தார்கள் என்பதும் உண்மை. இத்தகைய தாழ்வுணர்ச்சியே அவர்களை சமகால அதிகாரத்தின் மீது பெரு விருப்பும் கொள்ள வைத்தது. பண்பாட்டு மேலாண்மை மிகுந்த தமிழ் இனத்தின் சுவடுகளை அழிக்கும் வெறி கொள்ள வைத்தது. அவர்கள், நூலக எரிப்பு வரை கூட சென்றார்கள். தங்களது வரலாற்றுத் தாழ்வுணர்ச்சியை சமகால அரசியல் மேலாண்மையின் மூலம் மட்டுமே நிவர்த்தி செய்யவும் விரும்பினார்கள்.


இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்த, தேசிய இன அடையாளங்களை, வரலாறு மற்றும் பண்பாட்டின் மூலம் கட்டமைப்பது என்ற உத்தியைக் கற்றுத் தந்தது இருபதாம் நூற்றாண்டு சமூக அறிவியல்களே. அவையே, இரண்டு அருகாமை இனங்களின் அதிகார மோதல்களைக் கருத்தியல் மோதல்களாகவும் வடிவமைத்துத் தந்தன.


பாரதியின் நூல் ஏறக்குறைய இதே ஆய்வுகளின் துணையோடே சிங்களவர் - தமிழர் முரண் பொய்யானது என்று நிரூபிக்க முயல்கிறது. அந்த முயற்சியில் அவர் மூன்று வாதங்களை முன்வைக்கிறார். முதலாவது, சிங்களவர் - தமிழர் முரணின் அடிப்படையான மொழி வேற்றுமையை மொழியியல் ஆய்வுகளின் மூலம் மறுப்பது; இரண்டாவது, சமய வேற்றுமையை பண்பாட்டு மானிடவியல் ஆய்வுகள் மூலம் மறுப்பது; மூன்றாவது, சிங்களவர் - தமிழர் ஒற்றுமைக் கூறுகளை மரபணு ஆய்வு முடிவுகள் மூலம் நிருவுவது.


*************


சிங்கள மொழி, இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து தோன்றியது என்றாலும், பின்னாட்களில் ஏராளமான திராவிட மொழிக்குடும்பக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, அது இந்திய மொழிகளின் தொடர்ச்சியையும் தென்னிந்திய மொழிகளின் நீட்சியையும் கொண்டுள்ளது என்பது இந்த நூலின் வாதம். இதற்காக அவர் சிங்கள மொழியின் வரி வடிவத்தையும் ஒன்றிரண்டு வார்த்தை ஒப்புமைகளையும் எடுத்துக் காட்டுகிறார்.


ஆனால், இந்த வாதம் எவ்வளவு மேலோட்டமான வாதம் என்பதை மொழியியல் அறிந்தவர்கள் சொல்ல முடியும். வரி வடிவங்களையும், உச்சரிப்பு மயக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு பண்பாட்டு முடிவுகளுக்கு வந்து சேர்வதை மொழியியல் கைகழுவி ஒரு மாமாங்கம் ஆகிறது. இன்றைக்கு, cognitivie linguistics என்று சொல்லப்படுகிற ஆய்வுகள், இரு வேறு மொழிகளுக்கு இடையேயான உறவை, அவற்றின் சிந்தனை ஒழுங்கை ஆராய்வதன் மூலமே மேற்கொள்ள முடியும் என்று கண்டறிந்திருக்கிறது. வெறும் வார்த்தைகள் அல்ல, அந்த வார்த்தைகள் முன்வைக்கும் கருத்தியல்கள் தான் இரண்டு சமூகங்களின் நெருக்கத்தை அளவிட உதவும். சிங்களவர் - தமிழர் இடையிலான நெருக்கத்தை பக்தவத்சல பாரதி உண்மையாகவே நிரூபிக்க விரும்பினால், அவ்விரு மொழிகளில் நடைபெறுகின்ற அறிவுச்செயல்பாட்டின் நெருக்கத்தையே மொழியியல் வழி எடுத்துக் காட்ட வேண்டுமே தவிர, மேலோட்டமான வரி வடிவையும் உச்சரிப்பு முறைகளையும் அல்ல.


*********


இரண்டாவது, சிங்களவர் - தமிழர் முரண் என்று சொல்லப்படும் சமய முரணையும் இந்த நூல் மறுக்கத் தொடங்குகிறது. பெளத்தம் - இந்து என்று சொல்லப்படுவது தீர விசாரிக்காது சொல்லப்பட்ட முரணே தவிர, நடப்பில் இரு சமயங்களும் ஒன்றே தான் என்று சொல்ல ஆசைப்படுகிறார் பாரதி. இதற்கு, இரண்டு ஆதாரங்களை அவர் காட்டுகிறார். ஒன்று, சிங்களவர் மத்தியிலான கண்ணகி வழிபாடு; மற்றது, சிங்களவர்களின் கதிர்காம முருகன் வழிபாடு. கூடுதலாக, பெளத்தம் ஒன்றும் வேற்று மதம் இல்லையே, இந்தியாவில் தோன்றியது தானே என்றும் எழுதுகிறார்.


சிங்களவர் மத்தியிலான பத்தினி வழிபாடு (பாரதி சொல்வது போல கண்ணகி வழிபாடு அல்ல!) பற்றி கணநாத் ஓபயசேகரே எழுதிய புத்தகம் மிக முக்கியமானது. அந்தப் புத்தகம் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது - சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் இது போன்ற வழிபாடுகளை சிங்கள நிறுவன பெளத்தம் எப்பொழுதுமே கண்டும் காணாமலும் தான் இருந்து வருகிறது; ஒரு வகையில் சொல்லப் போனால், பத்தினி வழிபாடு போன்ற நாட்டுப்புற பெளத்த சடங்குகளைச் செய்யும் பூசாரிகள் நிறுவன பெளத்தத்தைச் சார்ந்த பிக்குகள் அல்ல.


சிங்கள நிறுவன பெளத்தம், நாட்டுப்புற பெளத்த சடங்குகளை மறுதலிப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆல்காட், பிளாவட்ஸ்கி போன்ற ஐரோப்பிய ஆய்வாளர்கள் பெளத்தம் குறித்த ஆர்வத்தை வெளியிட்ட பொழுது, அது நிறுவன பெளத்த ஆர்வமாகவே இருந்தது. அந்த ஆர்வம், கிராம பெளத்தத்தை களங்கமுடையது என்று மறுக்கவும் அவர்களைத் தூண்டியது. அவர்கள், எழுத்துப்பிரதிகளின் வழியே ஒரு ‘தூய’ பெளத்தத்தையே கட்டமைக்க விரும்பினார்கள். இக்காலகட்டத்தில் அனகாரிக தம்மபாலா மாதிரியான சிங்கள பெளத்த பிக்குகள் ‘கிராம பெளத்தத்தை’ அறவே மறுத்து ஒதுக்கும் போக்கையும் ஆரம்பித்து வைத்தார்கள் என்பது வரலாறு.


இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில், சிங்களவர்கள் மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்ட மத அடிப்படைவாதம் இந்த நிறுவன பெளத்தத்திலிருந்து தான் தோன்றி வளர்ந்தது என்பதை நாம் நன்கு அறிவோம். தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, சிங்களவர்களின் நாட்டுப்புற பெளத்த மரபிலிருந்து உருவானது அல்ல, அது முழுக்க முழுக்க நிறுவன பெளத்தத்தின் பிக்குகளால் திட்டமிடப்பட்டது. ஆக, சிங்கள - தமிழ் சமய முரண் என்பது நிறுவன பெளத்தம் - நிறுவன சைவம் முரணாகத்தான் பார்க்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டுமே ஒழிய, அதனுள் நாட்டுப்புற வழிபாடுகளுக்கு எந்தக் கருத்தியல் பங்களிப்பும் இல்லை. எனவே, பக்தவத்சல பாரதி, சிங்களவர்களின் கண்ணகி, சிங்களவர்களின் முருகன் என்று சொல்லி பெளத்த - இந்து முரண் ஒரு கற்பிதம் என்று சொல்வது விளையாட்டுத்தனமாகத் தோன்றுகிறது.


*************


மூன்றாவதாக, மரபணு ஆய்வுகளை மிக முக்கியமானச் சான்றாக பாரதி எடுத்து வருகிறார். சமீபத்திய மரபணு ஆய்வுகள் சிங்களவர்களை தென்னிந்திய குடிகளின் பந்துக்களாக எவ்வாறு நிருவுகின்றன என்று பேச ஆரம்பிக்கிறார்.


ஒரு பண்பாட்டு மானிடவியலாளர், உடற்கூறு மானிடவியலின் ஆதரங்களை வைத்துக் கொண்டு, ஒரு பண்பாட்டுச் சிக்கலை எவ்வாறு சீர்படுத்த முனைகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மரபணு அறிவியல்கள் ஒரு கட்டத்தில் மனித குலத்திற்குப் பொதுவான மூதாய்களைத் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வரும் இயல்புகளைக் கொண்டவை. பரிணாமக் கோட்பாட்டின் குழப்பமான பக்கங்களான, ஒற்றைத் தோற்றத்தையும் அல்லது சுத்த தோற்றத்தையும் நாம் சமூக அறிவியல் ஆய்வுகளில் கடந்து வந்து இன்றைக்கு பன்மையின் இருப்பை பேசிக்கொண்டிருக்கிற சூழலில், மரபணு ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு பண்பாட்டுச் சிக்கல்களுக்கு பதிலளிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.


************


அப்படியானால், இலங்கையில் சிங்களவர் என்ற புத்தகத்தின் மூலம் பக்தவத்சல பாரதி என்ன தான் சொல்ல வருகிறார்?


அதற்கு அப்புத்தகத்தின் பின்னட்டை வாசகமொன்று இவ்வாறு பதிலளிக்கிறது: ‘…இனவேறுபாடுகளுக்கு அப்பால் அறிவார்ந்த புதிய உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம்’. இதையே தான் அதன் வெளியீட்டு விழாவில் ஏற்புரை வழங்கிய போதும் பக்தவத்சல பாரதி தெரிவித்தார். ‘தமிழர்கள் அறிவார்ந்த சமூகமாக மாற வேண்டும்!’ (பார்க்க, தி இந்து செய்தி, 5-02-2017).


‘இன வேறுபாடுகளுக்கு அப்பால்…’ என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? இன வேறுபாடுகள், தவறான ஒரு சிந்தனை; அதைக் கடந்து ‘மானுடம்’ என்ற பார்வையில் சிந்திக்க வேண்டும்’ என்ற சாராம்சவாதமாகவா? இனவேறுபாடுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை (பாருங்கள், மரபணு ஆய்வுகள் ஒருவரையொருவர் கொன்று கொண்டிருக்கும் இரண்டு இனங்களைத் தான் நெருக்கமானவர்களாகக் காட்டுகிறது!); எனவே, அதற்கு அப்பால் வந்து சேருங்கள் என்றா? அல்லது ‘இனவேறுபாடுகள் ஒரு கற்பிதம்’ என்று மனதிற்குள்ளாகவே ஜெபிப்பதன் மூலமா?


‘…அப்பாலுள்ள புதிய உலகில்’ அரசியல், பொருளாதார அதிகாரங்கள் உண்டா? அந்த அதிகாரங்களை யார் யார் கைகொள்வது என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? அல்லது, அந்த உலகில் (சொர்க்கத்தைப் போல) அதிகாரங்களே இல்லையா? அந்த உலகில் மனிதர்களுக்கு ஆசைகள், அபிலாசைகள் என்று ஏதேனும் உண்டா? இல்லை, எதுவுமற்ற நிச்சலனமே பிரதான உணர்வாக இருக்குமா?


**********


இதற்கெல்லாம் மாறாக, அறிவு என்பதை நான், வேறுபாடுகளை அங்கீகரிப்பதாகத்தான் விளங்கிக் கொள்கிறேன். சிங்களவர் வேறு, தமிழர் வேறு என்பதை ஏற்றுக் கொள்தல் தான் அடிப்படை அறிவு என்று நம்புகிறேன். அவரவர், அவரவர் அடையாளத்தோடு வாழும் உரிமையை ஒவ்வொருவரும் காப்பாற்றுவது என்பதையே நான் அறிவின் மூலகங்களாக நினைக்கிறேன். இது தான் ஆகக் கடினமான காரியமென்றும் நான் நினைக்கிறேன்.


வேறுபாடுகள், காழ்ப்புணர்வுகளையும், வெறுப்பையும் தோற்றுவிக்கின்றன என்பதற்காக வேறுபாடுகளையே மறுக்கிற வேலையை நான் என்றைக்குமே செய்ய மாட்டேன். ஏனெனில், அது அறிவிற்குப் புறம்பான வேலை என்று எனக்குத் தெரியும். வேறுபாடுகளையெல்லாம் தரைமட்டமாக்கிவிடுவதைப் போன்ற வன்முறை வேறொன்றும் இல்லை என்பதையும் நான் பிடிவாதமாக நம்புகிறேன். வேறுபாடுகளைக் களைந்து புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வாக்குறுதிகளை நான் முழுக்க முழுக்க சந்தேகப்படுகிறேன். ஏனெனில் அந்தக் குரல் மாயையை உண்மை போல பேசும் அராஜகத்தை தனது இயல்பாகக் கொண்டுள்ளது.


**********


சிங்கள - தமிழ், இன வேறுபாட்டுச் சிக்கல்களைக் களைய விரும்புவதாகச் சொல்லும், ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற நூல், இன அடையாளங்களையேக் களைவது தான் சிக்கல்களைக் களைவது என்று பேசத் தொடங்குவது தான் ஆபத்தானது. அதற்காக, அது இல்லாதவொரு உண்மையைக் கட்டமைக்க முன்வருகிறது. அந்த உண்மையை நிரூபிக்க, மொழியியலின் தோற்ற மயக்கங்களையும், நாட்டுப்புற பெளத்தக் கூறுகளையும், மரபணு ஆய்வு முடிவுகளையும் எடுத்து வந்து காட்டுகிறது. இத்தருணத்தில் அந்நூலுக்கு நான் சொல்ல முடிந்ததெல்லாம் ஒரே ஒரு விஷயம் தான்: இனவேறுபாடு கடந்த உண்மை என்று எதுவும் இல்லை; வேறுபாடு தான் உண்மை! நாம் நம்பவேண்டுமென்றால் வேறுபாட்டைத் தான் நம்ப வேண்டும்!


இறுதியாக சில விஷயங்கள்:


முழுக்க முழுக்க, தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களின் வாசிப்பிற்காக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை, இனத்துவேசத்தின் கொடூர கரங்களால் சிதைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் வாசித்தால் என்ன உணர்வை அடைவார்கள்?


அதே போல, இன அழிப்பின் இரத்தக் கறை அகலாத கரங்களையும் அது குறித்த குற்றவுணர்ச்சியையும் வளர்த்துக் கொள்ளாத சிங்களவர்கள் இந்தப் புத்தகத்தை வாசித்தால் எப்படி அர்த்தம் கொள்வார்கள்?



எனக்கென்னவோ, ஈழத்தமிழர்கள் நம்மை விட்டு விலகியும், சிங்களவர்கள் நம்மை நெருங்கியும் வருகிற துயரம் நடக்குமோ என்று தோன்றுகிறது. 'இலங்கையில் சிங்களவர் என்ற இப்புத்தகம் 'அடையாளம்' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது

Comments


bottom of page