காற்றில் கலந்த புத்தகங்கள்
- tdharmaraj67
- 5 minutes ago
- 8 min read
புத்தகங்களைப் பேணுவது பற்றி பக்கம் பக்கமாய் எழுத முடியும். ஏற்கனவே எழுதியும் இருக்கிறார்கள். தனிநபர் தொடங்கி நிறுவனங்கள் வரை புத்தகங்களை சொந்தம் கொண்டாடுபவர்கள் விதவிதமாய் அவற்றைப் பாவிக்கிறார்கள்: பாதுகாக்கிறார்கள். புத்தகங்களின் காதலர்கள் என்று சிலரைச் சொல்கிறார்கள். 'புத்தகப் புழு' என்றும் கொஞ்சம் பேர் உண்டு. பூதம் புதையலைக் காப்பது போல புத்தகங்களை சிலர் காத்து வருவதுண்டு. எனக்குத் தெரிந்த சிலர் தங்களது வீட்டில் நூலகமோ என்று வியக்கும் வகைக்குப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். வீட்டிற்கு வருபவர்களை அழைத்து வந்து அந்த நூலகத்தைச் சுற்றிக்கூட காட்டுகிறார்கள். அந்த நூல் வரிசைகளின் முன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். புகைப்படம் என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகிறது. தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு வழக்கம் உண்டு. வழக்கறிஞர்கள் என்றால் அவர்களுக்குப் பின்னால் தடிமன் தடிமனான காலிக்கோ அட்டையிட்ட புத்தகங்கள் இருக்க வேண்டியது அவசியம். அது திரைப்படமானாலும் சரி, தொலைக்காட்சியானாலும் சரி. இந்த விதியை மீற முடியாது.
பாளையங்கோட்டை மத்திய நூலகம் தான் எங்களது பதின்பருவ கூடுபுள்ளி. அங்கு உட்கார்த்து படிப்பதை நாங்கள் என்றைக்கும் விரும்பியதில்லை. வீட்டிற்கு எடுத்துச் சென்று தான் படிப்பெல்லாம். ஆனாலும், அந்த நூலகத்தில் தான் எங்களது பகல் நேரமெல்லாம் கழியும். இன்றைக்கு விண்டோ ஷாப்பிங் என்று சொல்கிறார்களே. அதைத்தான் நாங்கள் அன்றைக்கு நூலகங்களுக்குள் செய்தோம். ஒவ்வொரு அடுக்காக மேய்ந்து கொண்டிருப்போம். இன்ன புத்தகங்கள் தான் என்றில்லை. எல்லாவற்றையும் எடுத்து பார்த்து, புரட்டி, அங்கேயிங்கேயென வாசித்துப் பார்க்காமல் வைத்ததில்லை.
அன்றைக்கு நூவக ஊழியர்கள் எங்களைத் தொந்தரவாக நினைத்ததில்லை. தினசரி காலையில் வந்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்து தூசி தட்டி அடுக்கி வைத்துச் செல்லும் சம்பளம் கேட்காத பையன்களை அவர்களுக்கு ஏன் பிடிக்காமல் போகிறது? ஒரு கட்டத்தில் வாசகர்கள் கேட்டு வரும் புத்தகங்களை எடுத்தும் தரும் விற்பன்னர்களாகவும் நாங்கள் மாறிப் போனோம். நூலகங்கள் அவ்வளவு தூரம் கவர்ச்சிகரமானவையாக விளங்கின. ஒன்றரை ஆள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கும் அடுக்குகளுக்கு இடையிலான, குறுகலான வெளிர் இருட்டில், புத்தகங்களிலிருந்து எழும்பும் புழுக்க வாசனையோடு நடமாடியதை பின்னொரு நாள் ஆழமான இருண்ட நீர் திரம்பிய கிணறொன்றின், பாசி படர்ந்த, அரைகுறையாய் வெட்டப்பட்டிருந்த சுற்றுப் படிகளில் தயங்கித் தயங்கி இறங்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் மீண்டும் நான் உணர்ந்தேன். இருளில் பளபளக்கும் நீர் போலத்தான் நூலகம் தளும்பிக் கொண்டிருந்தது.

மாவட்ட நூலகத்தின் புத்தகங்களை ஒன்று விடாமல் தூசி தட்டிக் கொண்டிருப்பதில் எங்களுக்கொரு ரகசியத் திட்டமும் இருந்தது. வெவ்வேறு அடுக்குகளில் வைக்கப்பட்டிருந்த எங்களுக்கு விருப்பமான புத்தகங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டி வந்து நூலகத்தின் ஓரடுக்கில் நாங்கள் நிரப்பிக் கொண்டிருந்தோம். அந்த அடுக்கு ரகசியமான இடத்தில் இருந்தது. அதில் நாங்கள் படிக்க விரும்பிய புத்தகங்கள் மட்டுமே இருந்தன. அதனை வேறு யாராலும் கண்டுபிடித்துவிட முடியாத வகைக்கு சூழ்ச்சியாய்த் திட்டமிட்டிருந்தோம். அது எங்களுடைய ரகசிய நூலகம். அதனருகில் நாங்கள் கூட சும்மா செல்வதில்லை. நூலகத்தின் எப்பகுதியில் இருந்தாலும் அந்த ரகசியத்தின் மீது எங்கள் கண் உட்கார்ந்து கொண்டிருக்கும். வேறு யார் அதனருகில் சென்றாலும் நாங்கள் உடனே பதட்டமடைவோம். அந்த வகையில் எங்களின் ரகசிய நூலகம் வளர்ந்து கொண்டேயிருந்தது.
நானும் ரமேஷும் தான் இந்த ரகசிய நூலகத்தின் காரணகர்த்தாக்கள். இதனால் நாங்கள் படிக்க விரும்பும் புத்தகங்கள் எங்கள் பாதுகாப்பிலேயே இருந்தன. வசதி போல் எடுத்துப் போய் படித்துக் கொண்டிருந்தோம். எங்கள் ரகசிய நூலகத்தில் வின்சென்ட் பௌல் பின்னால் வந்து சேர்ந்து கொண்டான். அவனது நூலகப் பயன்பாடு வித்தியாசமானது, அவன் தனக்குத் தேவையான புத்தகங்களை ஆங்காங்கே ஒளித்து வைப்பான். சமையலறையில் அஞ்சறைப் பெட்டி, புளிப்பானை, உறியடுக்கு, சர்க்கரை டப்பா என்று தோன்றிய இடங்களிலெல்லாம் பணத்தைப் புதைத்து வைக்கும் பாட்டிகளின் தந்திரம் இது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியாது. சாண்டில்யன்களுக்குள் சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒளிந்து கொண்டிருப்பார். சுந்தர ராமசாமி, அழ. வள்ளியப்பா வரிசையில். நீங்கள் எதிர்பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் ஒளித்து வைப்பான். கன்னிவெடிகளைப் போல தற்செயலாய் மிதித்து வெடித்தபின்பு தான் உங்களுக்கே தெரியவரும். வின்சென்ட் பௌல் ஈழத் தமிழன்.
கல்கி வரிசையில் காரல் மார்க்ஸ், ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் வரிசையில் தர்மு சிவராமு என்ற யோசனை பிரும்மாண்டமானது என்றாலும் இதனை நாங்கள் மிக எளிய வகையில் கண்டுபிடித்தோம். நூலகத்தில் புத்தகங்களை அடுக்குவதற்கான கறாரான விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே கல்கியோடு மார்க்ஸ் வந்து சேர மாட்டார். விதிகளைப் பேணாத நமது நூலகங்களில் இது போன்ற ஜோக்குகள் எல்லாம் சாதாரணம். வெளியே போய்த் திரும்பி வந்த புத்தகங்களை நூலக ஊழியர் கைக்கு அகப்பட்ட அடுக்குகளில் வைப்பதுதான் தமிழ் மரபு. இது தெரிந்திருந்ததாலேயே நாங்கள் எல்லா அடுக்குகளையும் எப்பொழுதும் தேடிக் கொண்டிருந்தோம். இதனால் வின்சென்ட் பௌல் கஷ்டப்பட்டு ஒளித்து வைக்கும் புத்தகங்களை நாங்கள் எளிதாகக் கண்டுபிடித்து விட முடிந்தது. அதன் பின்பு தான் எங்களது ரகசிய நூலகத்தை அவனுக்கு அறிமுகம் செய்தோம். ஆனால், அவன் கடைசி வரை புத்தகங்களை ஒளித்து வைக்கும் பழக்கத்தை மட்டும் விடவேயில்லை.
புத்தகங்களைத் திருட முடியும் என்பது ஏனோ எங்களுக்கு வெகுகாலம் வரை தோன்றவேயில்லை. அவற்றை யாராலும் திருடிவிட முடியாது என்றே நம்பிக் கொண்டிருந்தோம். அல்லது புத்தகம், திருட்டு என்ற இரு விஷயங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவைகளாகவே எங்களுக்குள் பதிந்திருந்தது. தீவிரமான இலக்கிய ரசனையுடையவர்களிடமிருந்து தான் புத்தகத் திருட்டு பற்றியும் முதன் முறையாய்க் கேள்விப்பட்டோம். புத்தகத்தைத் திருடும் செயல் குறித்த வர்ணனைகளும், முஸ்தீபுகளும் அது ஏதோ வீரதீர சாகசம் போல நினைக்க வைத்தது. மிகப் பிரபலமான எழுத்தாளர்கள் எவ்வாறு புத்தகம் திருடுவார்கள் என்பதில் தொடங்கி, நேற்று வந்த சிறுபத்திரிகை வாசகர்கள் வரை புத்தகத்திற்காக என்னென்ன தகிடுதத்தங்களெல்லாம் செய்வார்கள் என்பது குறித்து வண்டிவண்டியாய் சங்கதிகள் உண்டு. எவ்வளவுதான் கதைகள் கேட்டாலும் புத்தகங்களைத் திருடிவிட முடியும் எண்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. புத்தகம் புத்தகமாய்த் தாண்டி, கடந்து நாட்டுப்புறவியலுக்குள் வந்து சேர்ந்தபொழுது, அங்கும் ஒரு வகை புத்தகங்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது.
பெரிய எழுத்துப் புத்தகங்கள்! சினிமா பாட்டுப் புத்தகங்களைப் போலிருந்தன. பக்கங்கள் தான் கொஞ்சம் அதிகம். பெரிய எழுத்து அல்லியரசாணி மாலை, பெரிய எழுத்து ஏணியேற்றம், பெரிய எழுத்து புலந்திரன் களவு…… இப்படியே எல்லாத் தலைப்புகளிலும் பெரிய எழுத்து உண்டு. கூடவே ஒரு துணைத் தலைப்பும் இடம் பெற்றிருக்கும் அதாவது பெரிய எழுத்து நல்லதங்காள் கதை - ஐதீகப் படங்களுடன். அட்டையில் தொடங்கி உள்ளே பக்கங்கள் வரை அனைத்தும் சாணித்தாள்கள் தான். போனால் போகிறதென்று அட்டை கொஞ்சம் போல தடிமனாயிருக்கும். தலைப்புடன் கதைக்கான ஐதீகப் படமொன்றும் அட்டையில் இடம் பெற்றிருக்கும். உள்ளே எழுத்துகள் அனைத்தும் 14 பாயிண்டில் தடிமன் தடிமனாய். இதனால்தான் அவையெல்லாம் பெரிய எழுத்து புத்தகங்கள்.
அப்புத்தகங்களின் தனித்தன்மைகளுள் ஒன்று, அதை எப்பொழுது பார்த்தாலும் பழைய புத்தகங்கள் போலவே தான் தோன்றும். அப்பொழுது தான் அச்சிடப்பட்டு வந்தன என்றாலும். அவையும் பழைய புத்தகங்கள் போலவே காட்சி தரும். புதுசை பழசு போல் தயாரிப்பதும், அப்படியே நம்புவதும், அப்படியே பாவிப்பதும் தனியானவொரு சிந்தனை வகை என்று சொல்லப்பட்டிருக்கிறது. வால்ட்டர் ஜே ஓங் என்ற ஆய்வாளர் 'வாய்மொழியியமும் எழுத்து மொழியமும்' (Orality and Literacy) என்றொரு புத்தகத்தில் ஓரிடத்தில் இப்படி குறிப்பிடுவார். வாய்மொழி (பேச்சு) சமூகம் மரபை விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கும். அதனுள் புதிய விஷயங்களை அறிமுகம் செய்வதென்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை, புதிய விஷயங்களைக்கூட பழசான பின்பு தான் அது தனக்குள் ஏற்றுக்கொள்ளும். எனவே எப்படிப் பார்த்தாலும் புதுசுக்குப் பேச்சு சமூகத்தில் இடமேயில்லை. அதனைப் பழசு என்று சொன்னால்தான் காரியமே நடக்கும்.
பெரிய எழுத்துப் புத்தகங்கள் இப்படியானவைதான். பழசு போல் தயாரிக்கப்பட்ட புதிய வெளியீடுகள். பளபளப்பான அட்டையோடு பல்வண்ண நவீன ஓவியங்களுடன், நல்லதங்காள் கதைப்பாடலை யாராவது வெளியிட்டு பெரிய எழுத்துப் புத்தக வாசகர்கள் அதனை எப்படி எதிர்கொள்வார்கள் என்று சோதித்துப் பார்க்கலாம். இந்தப் புத்தகங்களை விற்கும் முறைகள் கூட வித்தியாசமானவை. இவை கிடைக்கக்கூடிய முதல் இடம் பழைய பேப்பர் கடைகள் தாம். கட்டுக்கட்டாக அவ்வியாபாரிகள் இவ்வகைப் புத்தகங்களை வைத்திருப்பதைப் பார்க்க முடியும். இரண்டாவது, கோவில் வாசல் நடைபாதைக் கடைகள். தரையில் பரப்பி விற்றுக் கொண்டிருப்பார்கள். திருவிழாக்களில், சந்தைகளில் என்று மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இப்புத்தகங்களை விற்பது வழக்கம்
இந்தப் புத்தகங்களை யார் வாங்கி வாசிக்கிறார்கள்? அவர்களது வாசிப்புப் பழக்கம் எப்படிப்பட்டது? வாசிப்பு அனுபவம் என்ன? என்ற கேள்விகளுக்குப் பொத்தாம் பொதுவான பதிலையே வெகுநாளாய் நாட்டுப்புறவியலில் சொல்லிக் கொண்டிருந்தோம். கிராமப்புறத்து வயதான ஆண்களும், பெண்களுமே இதன் வாசகர்கள். அவர்களுக்கு அரைகுறையான கல்வியறிவு உண்டு; பார்வை பழுதடைந்த காரணத்தால் கண்ணாடி அணித்து வாசிப்பார்கள். எனவே தான் இப்புத்தகங்கள் பெரிய அளவு எழுத்துகளாக அச்சிடப்படுகின்றன; மேலும் வில்லுப்பாட்டு, கணியான் கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களும் தொழில் நிமித்தமாக இப்புத்தகங்களை வாசிப்பது உண்டு.
அழகிய நாயகி அம்மாளின் 'கவலை' இது போன்ற தகவல்கள் உண்மை என்று சாட்சியம் சொல்லியது. அழகிய நாயகி அம்மாளின் இலக்கிய உலகம் பெரிய எழுத்துப் புத்தகங்களால் நிரம்பியதுதான். தனது குடும்பக் கதையை புராண, இதிகாச காலத்திலிருந்து சொல்லத் தொடங்கிய உத்தியை அவர் பெரிய எழுத்துப் புத்தகங்களிலிருந்து தான் சுற்றுக் கொண்டிருக்க வேண்டும். இப்படி, 'பெரிய எழுத்துப் புத்தகங்கள்’ என்ற செய்தி என் யோசனைக்குள் துடித்துக் கொண்டேயிருந்த நாட்களில் தற்செயலாய் இந்த செய்தியைக் கேள்விப்பட்டேன்.
தொழில்முறைக் கதை படிக்கிறவர்கள் என்று சிலர் தமிழகக் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். இந்தத் தகவல் பல வகைகளில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. கதை சொல்வது என்றால் தெரியும். அது என்ன கதை படிக்கிறது? அதுவும் கதை படிப்பதைத் தொழிலாகக் கொள்வது என்றால் எப்படி? ஜப்பானியப் பண்பாட்டில் கதைசொல்லும் கலைஞர்கள் உண்டு என்பதும், அவர்கள் தொழிலாகவே இதைச் செய்கிறார்கள் என்பதும் தெரியும். ஆனால் நமது மரபில் எல்லோரும் கதை சொல்லும் கலைஞர்கள் தான். எனவே தொழிலாக மாறவில்லை. ஆனால், கதை படிப்பதை சிலர் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதன் பின்னணியைத் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.
தொழில்முறைக் கதை படிப்பவர்களை என்னால் உடனடியாகத் தேடிக் கண்டுபிடிக்கவும் முடிந்தது. நான் இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களிலேயே அவர்கள் வசித்து வந்தார்கள். ஒருவர் பெட்டிக்கடை வியாபாரி. இன்னொருவர் விவசாயக்கூலி. வேறொருவர் வேலை ஏதும் செய்ய முடியாத வயோதிகர். கதை படிப்பது அவர்களுக்கு துணைத் தொழில் போல. 'நிறைய ஊர்களுக்கு கதைபடிக்க போயிருக்கிறோம்' என்று சொன்னார்கள்.
"என்ன கதையைப் படிப்பீங்க!"
”பொஸ்தகத்துல உள்ளது தான்"
"என்ன புத்தகம்?"
'பெரிய எழுத்து கதப் பொஸ்தகம் இருக்கில்லா…. அது தான்."
இதன் பின்பு நான் தெரிந்து கொண்டவை அனைத்தும் ஏராளமான கேள்விகளையும், விவாதங்களையும் உள்ளடக்கியிருந்தன. எப்பொழுதுமே கள ஆய்வுகளில் இப்படித்தான் நடந்து விடுகிறது. ஏதாவதொன்று நம்மை சுறுசுறுவென்று பற்றிக்கொள்ள வேண்டும். அந்த ஏதாவது ஒன்றை அடையும் வரை அல்லது கண்டுபிடிக்கும் வரை திசைவழியறியாத அல்லாட்டம்; கிடைத்த பின்பு கதையே வேறு. கூழாங்கற்கள் உருளும் பெரிய ஆற்றின் நீர்ப்போக்கில் அடித்துச் செல்லப்படும் பரிசல் போல மாறிவிடும் வாழ்க்கை. எனக்கும் அப்படித்தான் ஆச்சு.
எழுத்தறிவை அப்படியொன்றும் சிலாகித்திராத பேச்சு சமூகம், தனக்குப் புத்தகம் படித்துக் காட்டுவதற்கென்று சில தொழில்முறை வாசிப்பாளர்களைத் தயார் செய்து வைத்திருக்கிறது. இவர்களது வேலை எழுத்தை சப்தமாக மாற்றுதல். ஒலிதான் அடிப்படை. ஒலிதான் அர்த்தத்திற்கு இட்டுச் செல்கிறது. ஒலியைக் காட்சியாக உருமாற்றியபோது பேச்சு சமூகம் அதுபற்றி பெருசாய் எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. பேச்சை நிரந்தரமாய் சிறைப்படுத்தி வைக்க முடியும். அந்த ஒலிச் சிறைகளுக்குப் பெயர் புத்தகம் என்று சொன்ன பொழுதும் பேச்சு சமூகம் பதட்டம் எதையும் அடையவில்லை. பேசுவது மட்டுமே சாஸ்வதம் என்றிருந்தது. எழுதுவதும், வாசிப்பதும் அப்படியொன்றும் அத்தியாவசியத் தேவைகள் இல்லை. இதுவெல்லாம் ஃபேஷன் மாதிரி. கொஞ்ச காலத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்து பின்பு தானாக அடங்கிவிடும். பேச்சு சமூகம், எழுத்து என்ற உத்தி கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் இப்படித்தான் யோசித்திருக்க வேண்டும்.
பின்னொரு காலத்தில் எழுத்தறிவற்றவர்களெல்லாம் முட்டாளாகப் பார்க்கப்படுவார்கள் என்று அன்றைக்கு யாருக்கும் பட்டிருக்காது. கொஞ்சம் கொஞ்சமாய் எழுத்து தனக்கான சமூகத்தளத்தை வடிவமைக்கத் தொடங்கியது. அறிவும், ஞானமும் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட முடியுமென்று தெறித்த யோசனை, எழுத்திற்கான நிரந்தரத் தேவையொன்றை உருவாக்கியது. இப்பொழுது பேச்சு சமூகம், 'எழுத்தைப்' பயனுள்ள தொழில் நுட்பமாகப் பார்க்கத் தொடங்கியது. பரவாயில்லையே, இதனால் கூட சில நல்ல காரியங்கள் நடக்கும் போல! எழுத்தைத் தனக்குள் அனுமதித்தது பேச்சு சமூகம்.
ஏற்கனவே சொன்னது போல், 'புதிய எழுத்து’ இப்பொழுது பழைய எழுத்தாக மாறியிருந்ததையும் கவனிக்க வேண்டும். எழுத்தை அங்கீகரித்து, புத்தகங்களைத் தனக்குள் ஏற்றுக்கொண்ட பேச்சு சமூகம் அவற்றை ஞானத்தின் பெட்டகங்களாக மட்டுமே கணித்திருக்க வேண்டும். அதாவது அன்றாட வாழ்க்கையின் உணவு உற்பத்தி தொடர்பான எந்தக் காரியத்திற்கும் எழுத்தோ, புத்தகங்களோ உபயோகப்படாது. இங்கெல்லாம் எப்போதும் போல் அனுபவங்கள் தான் ஆசான். ஆனால், வாழ்வின் மீளாத் துயர்களுக்கான பதில்களைத் தரும் ஞானத்தேடலுக்குப் புத்தகங்கள் தேவை. அது என்ன மீளாத் துயரங்கள்? மூப்பு பிணி, சாக்காடு. இதில் மரணம் மிகக் கொடூரம்! மரணத்திலிருந்து ஞானம் மட்டுமே விடுதலை தரும். மரணத்தை அறிவின் மூலம்தான் கடக்க முடியும்.
அப்படியானால் அந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்ள எல்லோரும் வாசிக்கக் கற்றுக் கொள்ளத் தானே வேண்டும்? வேண்டாம். அவசியமில்லை. எழுத்து என்பது தொழில் நுட்பம். ஞானத்தைப் பாதுகாக்கும் தொழில் நுட்பம். வேர்க்கடலையைப் பாதுகாக்கும் கூடுகள் போல.
கடலையைத் தின்பதற்குக் கூடுகளையும் செரித்துப் பழகணுமா என்ன? கூடுகளை உடைத்துப் பருப்பை எடுத்தால் பிரச்சனை முடிந்தது. கூடுகளை உடைப்பது தான், எழுத்தை ஒலிகளாக மாற்றுவது, அதாவது புத்தகத்தை சத்தமாய் மாற்றிவிட்டால் போதும். ஞானத்தை அவரவர் தனித்தோ அல்லது இணைந்து குழுவாகவோ சென்று சேர்ந்திட முடியும். எழுத்து வரிசையை ஒலி வரியாக மாற்றக்கூடிய ஒரு நபரை வேலைக்கு அமர்த்திக் கொண்டால் பிரச்சினை ஓய்ந்ததா?
இப்படித்தான் கதை படிக்கிறவர்களை வேலைக்கு அமர்த்தியது பேச்சுமொழி சமூகம். அவர்கள் புத்தகங்களை வாசிக்கிறவர்கள், சத்தம் போட்டு, உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்கும் வகையில் வாசிப்பார்கள். அதாவது புத்தகத்தை ஒலியாக மாற்றிக் கொண்டிருப்பார்கள். எழுதவோ படிக்கவோ தெரியாதது பற்றி எந்தக் குற்றவுணர்விற்கும் ஆட்பட்டிராத பேச்சு சமூகம் ஞான விசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.
இன்றைய தினம் கதை படிக்கப் போகிறவர்களுக்கு சம்பளம் நூறிலிருந்து நூற்றைம்பது வரை. இரவு முழுக்க, விடிய விடியக் கதை படிக்க வேண்டும். ராகம்போட்டு வாசிப்பது தான் வழக்கம். நிறுத்தச் சொன்னால் நிறுத்த வேண்டும். வாசிக்கச் சொன்னால் வாசிக்க வேண்டும். இடையில் இரண்டு அல்லது மூன்று முறை ஓய்வெடுத்துக் கொள்ளலாம். தேநீர், வெற்றிலை, பீடி சிகரெட் எல்லாம் இலவசமாய் வழங்கப்படும். குரல் கணீரென்று இருக்க வேண்டும்; உச்சரிப்பு சுத்தமாக இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் இன்றைக்கும் கதை படிக்கிறவர்களில் நிறையபேர், தேவேந்திர குல வேளாளர்கள். 'மாட்டோம்', 'மாட்டோம்' என்று கதறக் கதற வம்படியாய் 'தீண்டத்தகாதவர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். கதை படிக்கும் நிகழ்வு கூட இந்தச் சமூகத்தினர் மத்தியில் தான் பரவலாகக் காணப்படுகிறது. பிற சமூக மக்களிடம் நடைபெறும் நிகழ்விற்குக் கூட இந்தச் சமூகத்துக் கதை படிக்கிறவர்கள் தான் போய்க் கதைப்படித்து வருகிறார்கள்.
கதை படிக்கும் சம்பவத்தில், படிக்கிறவரை விட கேட்பவர்கள் தான் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். புத்தகத்தை ஒலியாய் மாற்றும் வேலையைச் செய்வதோடு கதை படிக்கிறவரின் பணி முடிந்து போகிறது. அந்த ஒலியை ஞானமாகத் திரட்டும் பணி முழுக்க முழுக்க கேட்பவர்களுக்கானது. இடையில் நிறுத்தச் சொல்லி, தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கி விடுகிறார்கள். வாதப் பிரதிவாதங்கள் திசைக்கொன்றாய்க் கிளம்பி வருகின்றன. கருத்துக்களால் தங்களுக்குள் மோதிக்கொள்கிறார்கள். தயிர் மத்து போல் குழம்பிக் குழம்பிக் கடைகிறது மனம். வெண்ணெயாய்த் திரளுமோ ஞானம்?
பெரிய எழுத்துப் புத்தகங்களைத்தாள் வாசிக்கப் பயன்படுத்துகிறார்கள். படிக்கும் தொழில்முறைக் கலைஞரே வாங்கிக் கொள்வார். சில நேரங்களில் வரிபோட்டும் புத்தகம் வாங்குவார்கள். கதை கேட்க விரும்புகிறவர்கள் தலைக்கு நாலணா போட்டுப் புத்தகம் வாங்குகிறார்கள். இந்த நாலணாவிற்கு 'வரி' என்று பெயர். இப்படி வரி போட்டு வாங்கிய புத்தகத்தைக் கதை படிக்கிறவரிடம் தந்து வாசித்துப் பழகச் சொல்கிறார்கள். வாசித்துப் பழகியதும், கதை படிக்கிற சம்பவம் நடக்கிறது.
கதை படிக்கும் சம்பவம் இரண்டு தருணங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இரண்டும் வெவ்வேறான ஏன், ஏறக்குறைய எதிரும் புதிருமான தன்மைகளை உடையவை. ஒன்று பகலில் நடந்தால், இன்னொன்று இரவில்; ஒன்று சாவு வீட்டில் என்றால் இன்னொன்று பிள்ளையார் கோவிலில்; ஒன்று சடங்கு சம்பிரதாயம் என்றால், இன்னொன்று கேளிக்கை போல; ஒன்றில் நல்ல கதை வாசிக்கப்படுகிறது என்றால் இன்னொன்றில் கெட்ட கதை; ஒன்று வருடத்திற்கொரு முறை என்றால், இன்னொன்று எப்பொழுதெல்லாம் சாத்தியமோ அப்பொழுதெல்லாம். இரண்டிற்கும் ஒரே ஒரு வலுவான சம்பந்தமும் உண்டு அது மரணம். இரண்டு கதை படித்தல் சம்பவங்களும் மரணத்தோடு தொடர்புடையன. ஒன்று மரணத்தைக் கடந்து செல்கிற சம்பவம். இன்னொன்று மரணத்தை தியானிக்கிற சம்பவம். இரண்டிலும் மரணம் தான் விவாதப்பொருள்.
முதல் வகை, இறப்பு நிகழ்ந்த வீடுகளில் நடைபெறுகிறது. இறப்பு நடந்த அன்றைய இரவோ அல்லது மூன்றாவது நாள் நடைபெறும் சடங்கிற்கு முந்தைய இரவிலோ கதை படிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இரவு ஒன்பது மணி போல் தொடங்குகின்ற கதைபடித்தல் விடியற்காலம் வரை நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் பஞ்சபாண்டவர் வனவாசம், கர்ண மோட்சம், நல்ல தங்காள் என்று புலம்பல்கள் நிறைந்த கதைகளையே வாசிக்கிறார்கள். கதை வாசிக்கும் நிகழ்வை இறப்பு நடந்த வீட்டுக்காரர் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்த செலவும் அவருடையது. இடையிடையே எல்லோருக்கும் தேநீர் வழங்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, புகையிலை கொண்ட தாம்பூலம் வர வேண்டும். பீடி, சிகரெட் வேண்டுகிற அனைவருக்கும் அவற்றை வாங்கித் தர வேண்டும். சீட்டாட விரும்புகிறவர்களுக்கு புதிய சீட்டுக்கட்டுகளை வாங்கி தர வேண்டும். இதற்கு மத்தியில் கதை படிக்கிறவர் ராகம் போட்டு பெரிய எழுத்து கதை புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார். அத்தனை வகையான லாகிரி வஸ்துக்களும் விநியோகிக்கப்பட்டு வீட்டில் இறந்தவரை கிடத்தியபடி தெருமுழுக்க அடைத்து உட்கார்ந்து கதை கேட்டு கொண்டிருக்கும் அதே மக்கள் பயபக்தியோடு சாப்பிடாமல் கொள்ளாமல் விரதம் இருந்து கதைபடிக்கும் நாளும் உண்டு. அது வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும்.
சித்திரபுத்திரன் நயினார் நோன்பு என்று பெயர். ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெறும் சம்பவம் இது. கதை படிக்கிறவர் சித்திர புத்திர நயினார் கதைப்பாடல் புத்தகத்தோடு காலையிலேயே கோவிலில் வந்து உட்கார்ந்து கொள்வார். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெரியவர்கள் வந்து நோன்பில் கலந்து கொள்வார்கள். வருகிற ஒவ்வொருவரும் நிறைநாழி நெல்லும், உப்பு, புளி, மிளகாயும் கொண்டு வந்து தருகிறார்கள். பகல் முழுக்க கதை படித்து விவாதம் நடக்கிறது. யாரும் அன்னம் தண்ணி பார்ப்பதில்லை. நோன்பு என்கிறார்கள். வயிற்றுக்கான உணவை தவிர்த்து செவிக்கு உணவை மட்டுமே பெற்றுக் கொள்வது என்று வைராக்கியமாக இருக்கிறார்கள். சாயங்காலம் போல பிள்ளையார் கோவில் பூசாரி செய்த பொங்கலை சாப்பிட்டுவிட்டு அவரவர் வீடு திரும்புகிறார்கள். பகல் முழுவதும் சித்திர புத்திர நயினார் கதைப்பாடல் தான் படிக்கப்படுகிறது. மரண கணக்கு பார்க்கும் சித்திரபுத்திரன் தான் கதைத்தலைவன். அவன் என்றும் இளமையோடு இருக்கும் மார்க்கண்டேயனாக பிறந்த கதையை அந்த புத்தகம் சொல்கிறது. இறுதியில் துணைக் கதையாக செட்டிப்பெண் அமராவதியின் கதையும் உண்டு. தான தர்மம் செய்து வாழ்ந்த அமராவதி இறந்த பின் மோட்சம் போவாள் என்று நினைக்க சித்திரபுத்திரன் அவளை நரகத்தில் தள்ளுகிறான். ஏன் என்று கேட்கிறாள் அமராவதி.
’நான் செய்யாத தானமா? அந்த தர்மங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமல் போனது ஏன்? என்ன தவறை நான் செய்தேன்?” அமராவதியின் கேள்வி இது.
‘தான தர்மம் செய்தால் மட்டும் போதும் என்று யார் சொன்னது? உன் வாழ்நாளில் என்றைக்காவது என்னை தியானித்து நோன்புகள் இருந்தது உண்டா? நல்ல நூல்களை படித்ததுண்டா? படிக்கத் தான் கேட்டது உண்டா? பின் எப்படி மோட்சம் போவாய்?’ என்று சித்திர புத்திரன் சொல்வதுடன் கதை படித்தல் முற்றுப்பெறுகிறது. கதை கேட்டவர்கள் எல்லோரும் ’ஆமா சரிதானே! தான தர்மம் செய்தால் போதும் என்றால் மோட்சமே பணக்காரர்களுக்கு தான் என்று ஆகிப்போகாதா? பின்னே நாமெல்லாம் எங்கே போறது?” என்று சொல்லிக் கொண்டே வீடு பார்க்கப் போகிறார்கள்.
ความคิดเห็น